மனித வரலாற்றில் இப்படியோர் கொடுமை

"இங்கே எங்கு பார்த்தாலும் பிணக் காடாய் கிடக்கிறது' வெள்ளைக் கொடி ஏந்தி சரணடையச் சென்று, துரோ கத்தால் சுட்டுக் கொல்லப் படுமுன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் இறுதியாக உலகோடு பேசிய வார்த்தைகள் இவை. ""இங்கே எங்கு பார்த்தாலும் பிணக்காடாய் கிடக்கிறது!''. மரணத்தின் எஜமானர்கள் நம் மக்களை முற்றுகையிட்டார்கள், சந்தையில் மலிந்த பொருள் போல் அள்ளிச் சென்றார்கள். சிங்களம் தின்ற உயிர் எத்தனை என்ற கணக்குக்கூட இல்லை. நாமறிய நவீன மனித வரலாற்றில் இப்படியோர் கொடுமை வேறெந்த இனத்திற்கும் நடந்ததில்லை.

"யுத்தம் முடிந்துவிட்டது, விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது' என இலங்கை அரசு அறிவித்து இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றன. எனினும் முல்லைத் தீவுக்குச் சென்று வர ஐ.நா. அமைப்புகளுக்கே அனுமதி இல்லை. முல்லைத் தீவை முற்றுகையிட்டது சுமார் ஒரு லட்சம் சிங்கள ராணுவத்தினர். அவர்கள் கடந்த பத்து நாட்களாய் செய்து வரும் வேலை தமிழர் இன அழித்தல் நடந்ததற் கான அத்தனை தட யங்களையும் அகற்றி விடுவது. இத்தனை ராணுவத்தினர் பத்து நாட்கள் துடைத்தபின்னரும் உலகினை அங்கு அனுமதிக்கும் துணிவு இலங்கை அரசுக்கு வரவில்லையென்றால் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

பஞ்சாப் பற்றியெரிந்து கொண்டிருக் கிறது. சீக்கியர்களை யாரும் அடிக்கவோ, அவமானப்படுத்தவோ இல்லை. ஆஸ்திரியா நாட்டில் ஒரு குருத்வாராவில் சீக்கிய மதத்திற்குள்ளேயே இருபிரிவினருக் கிடையில் சண்டை. அதன் எதிரொலி பஞ்சாபில் கேட்கிறது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிக்கை விடுகிறார். பிரதமர் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

இதே நாளில் ஜெனீவா நகரில் அனைத்துலக மனித உரிமை அவையின் அவசர சிறப்பமர்வு நடந்தது. முல்லைத்தீவில் இலங்கை ராணுவமும் விடுதலைப்புலிகளும் செய்த மனித உரிமை மீறல்களை, யுத்த விதிமீறல்களை விசாரிக்க அனைத்துலக குழு ஒன்று அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முன்வைத்தன. இத்தீர்மானத்தை எதிர்த்து இலங்கை அரசு தன்னைத் தானே பாராட்டும் ஒரு தீர்மானத்தையும், உலகிடமிருந்து பெரு நிதி கோரும் தீர்மானத்தையும் முன்வைத்தது. இலங்கையின் தீர்மானம் வெற்றி பெற வேண்டி அவையின் 47 உறுப்பு நாடுகளிடையே ஆதரவு திரட்டிய நாடுகள் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகியவை. ""எத்தனை அப்பாவித் தமிழர்கள் கொல்லப் பட்டார்கள் என்ற எண்ணிக்கையை அறியும் அருகதை கூட தமிழர்களுக்கு இல்லை'' என்று இலங்கையோடு சேர்ந்து இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் நாடுகள் கூறியிருக்கின்றன. இங்கே கூப்பிடு தொலைவில் ஏழு கோடித் தமிழர்கள் ஏதேனும் செய்யும் எண்ணமும் திண்ணமும் அற்றவர்களாய் எதுவும் பெரிதாக நடக்காததுபோல் நடக்கிறோம். நாதியற்றுப் போனோமடா தமிழா, நாதியற்றுப் போனோம். இப்படியொரு கீழ்மை வேறெந்த இனத்திற்கும் நேர்ந்திடக்கூடாதென இறையருளை வேண்டுகிறேன்.

தமிழனுக்கெதிராய் உலக அரங்கில் தீர்மானத்தை ஆதரித்துவிட்டு புதுடில்லியில் எவரும் சர்க்கார் நடத்திவிட முடியாதென முழங்கும் தமிழகம் எழுகின்றவரை, "இந்தியப் பெருங்கடல் எங்கள் மூதாதையர்களின் கடல்- எங்கள் இனத்தை அழிக்கத் துணைபோகும் எவனும் இந்தக் கடலில் கப்பல் ஓட்டவோ எண்ணெய் குழாய் பதிக்கவோ முடியாது' என முழங்கும் தலைவன் ஒருவன் இந்நிலத்தில் எழுகின்றவரை நம் இனத்தின் அவலம் இவ்வாறே தொடரும்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் தவறிழைத்துவிட்டார். சிங்களவருக்கு இந்தியாவும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், ஜப்பானும் பெருந்துணையாய் நின்ற நாட்களிலேயே அவர் சீனாவுடன் பேரம் பேசியிருக்க வேண்டும். அல்லது முன்பேயே அமெரிக்காவுடன் வர்த்தகம் பேசி "திரிகோணமலை துறைமுகத்தை' நீங்கள் விரும்பும் காலம் வரை நீங்கள் விரும்புகிறபடி பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்று ஒப்படைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் தமிழீழம் எப்போதோ கிடைத்திருக்கும். பட்டுக் கம்பளங்கள் விரிக்கப்பட்டு உலகத் தலைவர்களில் ஒருவராய் அவர் பெருமையுடன் உலா வந்திருப்பார். உண்மையில் இலங் கையின் இறையாண்மைக்காய் வேலுப்பிள்ளை பிரபாகரன் உறுதியாக நின்ற அளவுக்கு அந்நாட்டின் சிங்களத் தலைவர்கள் நிற்கவே இல்லை. எந்த உலக சக்திக்கும் வடகிழக்கு இலங்கையின் நிலப்பரப்பையும் வளங்களையும் தாரைவார்க்க வேலுப்பிள்ளை பிரபாகரன் முன்வரவில்லையென்பதுதான் அவர் செய்த பெரும் பிழை.

"இதயத்தில் பரிசுத்தமுடையோர் பாக்கியவான்கள். அவர்கள் கடவுளின் அரசை காண்பார்கள்' என பைபிள் சொல்கிறது. நான் பார்த்த வேலுப் பிள்ளை பிரபாகரன் தனது இயக்கத் தலைவர் என்ற வகையில் உறுதியானவ ராகவும், கடுமையானவராகவும் இருந்தாலும் ஒரு மனிதனாக இதயத்தில் பரிசுத்தமுடையவராகவும், நீதிமானாகவும் இருந்தார்.

தனக்கெனவும் தன் குடும்பத் தினருக்கெனவும் அவர் சொத்து எதுவும் சேர்க்கவில்லை. தனக்கென வங்கிக் கணக்கு அவர் வைத்திருக்கவில்லை. அவரது குடும்பம் உல்லாச வாழ்வு வாழ்ந்ததாய் இங்குள்ள ஆங்கில ஊடகங்கள் இலங்கை ராணுவம் வெளியிட்ட புகைப்படங்களை காட்டிய போது அந்த மனிதனை இந்த உலகம் யாரென அறியவில்லையே என மனம் வேதனித்தது.

உண்மையில் அவர் வாழ்க்கையை வெறுத்து ஒறுத்த மனிதரல்ல. அறநெறி நிற்க வேண்டுமென்ற உறுதியைப் போலவே எல்லோரும் வாழ்வில் உண்டு, களித்து, கதை பேசி இன்புற்றிருக்க வேண்டுமென விரும்பியவர். 2001-ம் ஆண்டு சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதுமே அவர் இயக்கத்திற்கு கொடுத்த முதல் அறிவுறுத்தல்களில் ஒன்றாகக் கூறப்படுவது... ""போராளி களுக்கு வாய்க்கு ருசியா, இறைச்சி, கறியெல்லாம் வச்சு தினமும் சமைச்சுப் போடுங்கோ. யுத்த காலத்திலெ வெறும் சோறும் பருப்புக் குழம்பும் சாப்பிட்டு சரியா கஷ்டப்பட்டு போயிட்டினும்''.

ஆனையிறவுக்கான இறுதி தாக்குதலை 1999-ல் அவர்கள் நடத்து முன் ஒரு சிறு கப்பல் முழுக்க மருந்துப் பொருட்களை புலிகளின் அனைத்துலக கொள்வனவுப் பிரிவினர் அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் கொள்வனவு செய்யப்பட்டி ருந்தது. ஆனால் வெளிக் குறிப்பு களின்படி அம்மருந்துகள் காலாவதியாகி -ஆங்கிலத்தில் "ஊஷ்ல்ண்ழ்ஹ் உஹற்ங்' என்று சொல்கிறோமே, அது -அப்படி காலாவதி யாகி ஒரு மாதம் கடந்திருந்தது. ஐரோப்பிய நாடுகளது இறுக்கமான தர நிலை கட்டுப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் காலாவதியாகி விட்டாலும்கூட இரு ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியுமாம். விலையும் குறைவாக இருக்குமென்பதால் வாங்கியிருக்கிறார்கள். அறிந்ததுமே அப்படியொரு ஆத்திரம் கொட்டித் தீர்த்திருக்கிறார் பிரபாகரன். கொள்வனவுப் பிரிவு பொறுப்பாளரை தொடர்பு கொண்டு, சீறித் தள்ளினாராம். ""என்ட போராளிகளின்ட உயிர் உங்களுக்கு அவ்வளவு மலிவா போச்சுதா? இந்த மாதிரி விளையாட்டெ இதோட கடைசியா வச்சுக் கொள்ளுங்கோ'' வேரித்தாஸ் வானொலி நாட்களில் போராளி நேயர் ஒருவர் எழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது: ""எங்கள் தலைவன் பொத்திப் பொத்தியும், தாய்க் குருவி போல் கொத்திக் கொத்தியும் திருத்தி வளர்க்கும் இக்கூட்டம் சண்டையில் மட்டும் புலிக்கூட்டம். மற்றபடி நெஞ்சில் நிறைய ஈரம் கொண்ட மனிதக் கூட்டம்!''.

""நீங்கள் பெரிய சண்டைக்காரர் என்று உலகிற்குத் தெரியும். மற்றபடி உங்களுக்கு மென்மையான ரசனைகள் உண்டா'' என்று கேட்டேன். ""ஓம் ஃபாதர்... நாட்டியம் எனக்கு நல்ல விருப்பம். என்ட மகளையும் நாட்டியம் படிக்க உற்சாகப்படுத்தியிருக்கேன்'' என்றார். ""நன்றாகச் சமைப்பீர்களாமே...?'' என்றேன். ""சமைப்பேன். இப்போ அதுக்கெல்லாம் நேரம் இல்லதானே? ஒரு காலத்திலே தோழர்களோடு சந்தோஷமா சமையலெல்லாம் செய்திருக்கோம்'' என்றார். ""பாட்டு பாடுவீர்களா?'' என்ற போது மட்டும் கொஞ்சம் வெட்கப்பட்டார். ""பாட வராது... பாட்டுக்கள் நல்லா ரசிப்பேன்'' என்றார். இரண்டாம் முறையாக நான் அவரைச் சந்தித்தபோது யுத்த காலத்தில் சுமார் 15,000 ஏழை -கைவிடப்பட்ட குழந்தைகளை தங்கள் பிள்ளைகளாய் எமது வானொலியூடாக ஏற்ற புலம்பெயர் மக்களுக்கு நன்றி கூறி நானே எழுதி இசையமைத்த ""கண் கண்ட எங்கள் தெய்வங்களே, நீர் வாழும் திசை நோக்கி கரம் கூப்பினோம்'' என்ற பாடல் ஒலிநாடாவை அவரிடம் கொடுத்தேன். கேட்டு நெகிழ்ந்த அவர் நானே ஒரு கணம் ஆடிப்போகும் வண்ணம் கேட்டார், ""ஃபாதர்... "கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' படம் பார்த்தினீங்களா? அடேயப்பா... "கண்ணாமூச்சி ஏனடா' பாட்டு ஏ.ஆர்.ரஹ்மான் என்ன மாதிரி போட்டிருக்கிறார். சின்ன வயசென்டாலும் சரியான திறமைக்காரன். கேட்டுக் கேட்டு சலிக்கேலெ... அப்படியொரு அழகான பாட்டு... ஏ..ஆர்.ரஹ்மான் நிச்சயம் உலக அளவிலெ பெரிய இசையமைப்பாளரா வருவார்'' என்றார்.

சோழ மன்னர்களுக்குப் பின் தமிழரின் வீரத்தை உலகிற்குச் சொன்ன வேலுப்பிள்ளை பிரபாகரன், "கண்ணாமூச்சி ஏனடா' பாடலை வியந்து ரசிக்கிற குழந்தையாகவும் இருந்ததென்பது பதிவு செய்யப்பட வேண்டிய முக்கிய செய்தியாக எனக்குப்பட்டது. எனவேதான் எழுதத் தலைப்பட்டேன். ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் பெருமை பெற்ற செய்தியை போர்க்களத்தில் நின்று கேட்டு நிச்சயம் அவர் மகிழ்ந்திருப்பார்.

1995 முதல் ஈழத்தமிழ் மக்களை மையமாகக் கொண்டு எமது வானொலி நிகழ்ச்சிகள் இருந்தபோதும் செய்திகள் சேகரிப்பிற்குக் கூட விடுதலைப்புலிகள் இயக்கத் தோடு நேரடி தொடர்புகள் எதுவும் நாங்கள் மேற்கொண்டதில்லை. மாதம் ஒன்றுக்கு தமிழ் ஈழப் பகுதிகளிலிருந்து பல்லாயிரக் கணக்கான கடிதங்கள் எமக்கு வரும். அந்தக் கடிதங்கள் சுமந்து வந்த உண்மையை உலகோடு நாங்கள் பகிர்ந்தோம். அக்கடிதங்களூடே உலகத் தமிழ் மக்களின் உணர்வு களைக் கட்டினோம். சிலுவைகளும் வியாகுலங் களுமேயான மக்களது வாழ்வுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி நம்பிக்கை தந்தோம். அவ்வாறு செய்வதை பெரிய பணியாகவொன்றும் நினைத்துக் கொண்டு செய்யவில்லை. ஒரு தமிழனாக சக தமிழனின் அவ லத்தில் உணர்வளவில் பங்கேற்ற செயலாக மட்டுமே நான் கருதினேன்.

நான் பிறந்தது ஜனவரி மாதத்தில். 1998-ம் ஆண்டு எனக்குத் தெரியாமலேயே என் சக ஒலிபரப்பாளர்கள் வானொலியில் எனது பிறந்தநாளை அறிவித்திருக்கிறார்கள். இந்த விபரம் எனக்குத் தெரியாது. நள்ளிரவு 11.50-க்கு ஒரு தொலைபேசி அழைப்பு. ""வணக்கம் ஃபாதர்... நான் தமிழ்ச்செல்வன் கதைக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள். எங்கட தலைவர் பேசுவார்'' என்றார். எனக்கு கை, கால் உதறியது. இனம் புரியா உணர்வொன்று தலைக்கேறி கிர்றென்றது. ""பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஃபாதர். எங்கட போராட்ட வரலாற்றிலெ உங்களுக்கும் ஒரு இட முண்டு. யாழ்ப்பாணத்தை விட்டு 1995-லெ நாங்க வெளிக்கிட்டப்போ எங்கட சனம் மட்டுமல்ல போராளிகளும் இந்த போராட்டத்தில் நம்பிக்கை இழந்திருந்தாங்கள்.

அப்ப மக்களின்டெயும் போராளிகளின்டெயும் நம்பிக்கையை தூக்கி நிறுத்தினது உங்கட குரல்தான். அதுக்கு நாங்க மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறம். தொடர்ந்தும் எங்கட மக்களுக்காக கதையுங்க'' என்றார். அப்போது எனக்கு வயது 32. படுக்கையினின்று எழுந்து அலுவலகம் ஓடினேன். பழைய என் நிகழ்ச்சிக் குறிப்புகளைத் தேடினேன். அப்படி என்னதான் செய்துவிட்டோம். ஒரு இனம் தேசியத்தலைவன் என்று கொண்டாடும் மனிதன் நம்மை வாழ்த்துவதற்கு என்ற கேள்வி, அலையாய் மனதில். அப்படியொன்றும் நான் செய்திருக்கவில்லை, நம்பிக்கை வார்த்தைகளைத் தவிர. தகர்ந்து போய் நிற்கும் அம்மக்களுக்கு இன்று நாம் தரக்கூடியதும் நம்பிக்கை. 


This Article from Nakkiran written By Rev.Jagath Gaspar,

Comments

  1. காந்தியும் நேதாஜியும் செய்தது விடுதலை போராட்டம். பிரபாகரன் அவர்கள் செய்தது தீவிரவாதம், எந்த வேதம் சொல்லும் நீதி இது.. ஒரு இன மக்கள் இங்கே அளிக்கப்பட்டு இருக்கிறார்கள்.. இதில் சம்பந்த பட்ட அனைவருக்கும் தெரிய வேண்டிய உண்மை ஒன்று உள்ளது... வரலாற்றை புரட்டி பாருங்கள் அநீதி செய்தவன் தனி மனிதனாய் இருந்தாலும், அரசாங்கமாய் இருந்தாலும் அதற்க்கான வினைபயனை அடைந்துள்ளது.. உங்களுக்கான முடிவை எதிர் பார்த்துகாத்திருங்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ரமணி சந்திரன் அவர்களின் எட்டு நாவல்கள்

காமராஜர்,சித்தா மற்றும் விவேகானந்தர் கதை நூல்கள் உங்களுக்காக PDF வடிவில்

ரமணி சந்திரன் நாவல்கள் உங்களுக்காக PDFவடிவில்